வழக்கமாக நான் செல்லும் பேருந்து , வழக்கம் போல தாமதமாகத்தான் வருமென்பதால், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். பேருந்து நிலையம் முழுக்க, ஏதோ ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது, பீக் ஹவர்களில் எப்போதுமே இப்படித்தான் !
நன்றி - புகைப்பட உதவி : www.thehindubusinessline.com
இவ்வளவு நாட்களாக, ஒரே பேருந்தில் (வழித் தடத்தில் ) சென்று வருவதால், சக பயணிகள் நன்றாகவே அறிமுகமாகியிருந்தார்கள்.ஆனால் யாருடனும் பேசிக் கொண்டதில்லை ! வழிமேல் விழிவைத்து காத்திக் கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரியவர் என்னருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக என்னுடனான உரையாடலை ஆரம்பித்தார், என் பதிலை எதிர்பார்க்கமலேயே !
**********************************************************************************************
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?"
".............."
"எங்க வேல பாக்குறீங்க ?"
".............."
"எனக்கு கன்னியாகுமரி பக்கங்க !"
".............."
**********************************************************************************************
"அனாவசியமாக" யாரிடமும் பேசக் கூடாது என்பது , மாநகர வாழ்க்கை எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் போதித்து விடுகிறது போலும் ! பேருந்து நிலையத்தில் இருந்த யாரும் - யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை.இவர் ஏன் குறிப்பாக என்னிடம் வந்து சுய புராணம் சொல்லிக்கொண்டிருக்கிறார் ?! அவர் பேசும் தொனியில் இருந்தே, ஏதோ பண உதவி கேட்கப் போகிறார் என்பதை ஊகித்தவனாய் நின்று கொண்டிருந்தேன்.
**********************************************************************************************
"எனக்கு நாலு பசங்க தம்பி..."
".............."
"யாருமே எங்களை கவனிக்கல தம்பி ..."
".............."
"சரி, அவனுங்களை ஏன் நம்பணும்னு , கெளம்பி சென்னை வந்துட்டேன் - எதாவது வேலை செஞ்சு பொழச்சிக்கலாம்னு."
" ?!?!?!?! "
"என் பொஞ்சாதி வேற ஒடம்புக்கு முடியாம ஊர்ல கெடக்கா தம்பி..."
"ம்ம்ம்ம்...."
"ஆனா, வயசாயிடுச்சேன்னு இந்த கெழவனுக்கு யாரும் வேல தர மாட்டேங்கறாங்க தம்பி..."
"ஓ....!"
"இப்போ திரும்பி ஊருக்கே போய்டலாமுன்னு தோணுது..."
"ம்ம்ம்..."
"ஆனா கையில சுத்தமா காசு இல்ல தம்பி - பஸ்ல போனா கொறஞ்சது 500 ரூபா ஆகும். ஆனா, ECR ல நின்னு எதாவது லாரில ஏறி 100 ரூபா கொடுத்தா ஊர்ல எறக்கி விட்டுருவாங்க ! கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி - ஆண்டவன் உங்களுக்கு ரெண்டு மடங்கு படி அளப்பான் !"
நன்றி - புகைப்பட உதவி :www.shutterstock.com
**********************************************************************************************
சொல்லி முடிதவரின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த நான் கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன்.
எவ்வளவு கஷ்டம் ?! ஒருவரிடம் உதவி கேட்பதற்கு முன்பு நாம் எவ்வளவு யோசிப்போம் ?! அதுவும் முகம் தெரியாத ஒருவரிடம் ? ஒரு மாதிரி கூச்சமாக இருக்கும் தானே ?! அதுவும் தன் பேரனைப் போல வயதுடைய ஒருவனிடம் காசுக்காக கேட்டு நிற்பது என்றால் , அவர் எவ்வளவு யோசித்திருப்பார் ? இது வரை எத்தனை பேரிடம் கேட்டிருப்பாரோ ? பரிதாபம் .
ஆனால் , நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! மாதம் ஆயிரக் கணக்கில் (!) சம்பாதிக்கிறோமே, ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது, இல்லையில்லை ஒரு 50 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! பாவம் பெரியவர். 50 ரூபாய் எடுத்த என்னை பரிதாபப் பார்வையுடன் பார்த்தார்.
"லாரிக் காரங்க 100 ரூபாய்க்கு கொறைஞ்சு ஏத்த மாட்டாங்க தம்பி"
ஒரு 100 ரூபாயில் என்ன ஆகிவிடப் போகிறது ?! 100 ரூபாயைக் கொடுத்து ,
"சரிங்க ஐயா.அழுவாதீங்க . பத்திரமா ஊருக்குப் போய் சேருங்க " ன்னு சொல்லி அனுப்பினேன். நான்தான் எவ்வளவு கருணை உள்ளவன் ?! அன்று முழுவதும், பெரியவர் ஊருக்குப் போய் விட்டதாகவும், பொஞ்சாதியுடன் சந்தோசமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன் .
**********************************************************************************************
ஒரு நாலஞ்சு நாள் இருக்கும். இது நடந்து.
என்னைப் போலோருவன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் வழி மேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருந்தபோதுதான் அதே பெரியவர் அவனருகில் வந்தார்.ஒரு 65 வயது இருக்கும். குறைவான உயரம்.மாநிறம்.ஐந்து நாள் தாடி. மெதுவாக அவனுடனான உரையாடலை ஆரம்பித்தார், அவன் பதிலை எதிர்பார்க்கமலேயே !
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
"நீங்க இந்த ஊருதானா தம்பி ?! "
நன்றி - புகைப்பட உதவி : www.oxheyworld.com
மீதியை படிக்க, அவன் வலைத்தளம் எழுதுகிறானா என அறிந்து கொள்ள வேண்டும்!
ஒருவேளை அவனுக்கும் ஆண்டவன் ரெண்டு மடங்கு படி அளந்திருக்கிறானோ என்னவோ ?!