அறிவிப்பு : இந்த கதையில் வரும் கதா பாத்திரங்களும், சம்பவங்களும் முழுவதும் கற்பனையே ! யாரையும் குறிப்பிடுவன அல்ல.
எச்சரிக்கை : இளகிய மனம் படைத்தவர்கள், வயதானவர்கள் , இருதய நோய் உள்ளவர்கள்,தன்னுடன் யாராவது ஒரு தைரிய சாலியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படிக்கவும். விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல !
டிஸ்கி : இப்படியெல்லாம் போட்டாதான் ஒரு கதை மாதிரி பில்ட் அப் ஆவது ,கொடுக்க முடியும் !
***************************************************
எல்லாருக்கும் வணக்கம்.நல்லாயிருக்கீங்களா ?! நம்ம பரிசல் அண்ணாச்சி
ஒரு சிறுகதை போட்டி அறிவிச்சிருந்தாரு இல்ல ?! சரி நாமளும் எழுதிதான் பார்ப்போமே என்ற ஒரு எண்ணத்தில் உதித்தது (!) தான் இந்த சிறுகதை (!!). சரி, உக்கார்ந்து ஒரே மணி நேரத்துல எழுதி முடிச்சிரலாம்னுதான் நெனச்சேன் ! ஆனா, உண்மையிலேயே ஒரு வாரமாச்சுங்க இத எழுதுறதுக்கு ! எதாவது லாஜிக் குறைபாடுகள் இருந்தா, பின்னூட்டத்தில் சொல்லுங்க. செகண்ட் பார்ட்டுல (ஆஹா, இதுல இது வேறயா ?! ) திருத்திடலாம்.
பார்ப்போம் என்னதான் நடக்குதுன்னு!
இனி, சரவெடி !!!
***************************************************
காமினி இந்த வார்த்தைகளை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.ஏன், சிவாவும் தான்.சுந்தரம் எப்போதுமே இவ்வாறு பேசிப் பார்த்ததில்லை இருவரும்.
"ஐயா எவ்ளோ வாட்டி சொல்லியும், இப்படி பண்ணிட்டு வந்திருக்கீங்களே ?! இப்படி சொதப்புவீங்கன்னு தெரிஞ்சிருந்தா, பேசாம செல்வத்துக்கிட்டயே இத செய்ய சொல்லிருயிருப்பேன் ". இதோடு நிறுத்திக் கொண்டிருந்தாலும் பரவாயில்லையே ?!
இதற்கு அப்புறம் சொன்ன வார்த்தைகளுக்குத்தான் முதல் வரி.
சுந்தரம் தான் பரந்தாமனுக்கு வலது கை, வலது கண், வலது கால், வலது காது எல்லாமுமே.பரந்தாமனிடம் அவ்வப் போது சண்டை போட்டுக் கொண்டு விருதாச்சலதிற்கு சென்று விட்டாலும் , இருப்பு கொள்ளாமல் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர் வீட்டிற்கே வந்து விடுவார். சுந்தரம் இல்லாத நாட்களில் பரந்தாமனுக்கு செல்வம் தான் சுந்தரம்.இன்றும் அப்படித்தான்.
"ஐயா, நா வேணும்னா டவுன் வரைக்கும் போய் சுந்தரத்தை இட்டுனு வந்துடட்டுங்களா ? " . செல்வத்தின் கேள்விக்கு வழக்கமான பதில்தான், பரந்தாமனிடமிருந்து. "நாயி எங்கடா போயிட போவுது ?! ரெண்டு நாளானா, தானா வால ஆட்டிட்டு இதே வாசலுக்கு தானே வந்தாகணும் ?! விடுறா. சாயங்காலத்துக்குள்ள குடோனுக்கு போய், லோடு இறங்கிடுச்சான்னு பாத்துட்டு போன் பண்ணு ". பதிலின் மறுமுனையில், டிராக்டர் வந்து நிற்க, செல்வம் தன்னுடன் நான்கு வேலையாட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுப் போனான்.
***************************************************
இந்தமுறை எப்படியாவது அந்த வைரத்தை எடுத்தாக வேண்டும். சுந்தரத்திற்கு பரந்தாமனின் வார்த்தைகள் தான் வேதம். நான்கு முறை தவறவிட்டாகிவிட்டது. இன்னொருமுறை ஐயா பொறுமையாக இருக்க மாட்டார். ஆகவே தான், எவ்வளவு செலவானாலும் தேவலை,கிஷோரிடம் சொல்லி மெட்ராசிலிருந்து ஆட்களை இறக்கி விடலாமென்று யோசித்தான்.அந்த யோசனை தான் காமினியும் சிவாவும் இன்று விருதாச்சலதிற்கு வரக் காரணம். இருவரும் கிஷோரின் நண்பர்கள் தான். கிஷோர் சுந்தரத்தின் மகன் என்பது உங்களுக்கும், எனக்கும் பரந்தாமனுக்கும் மட்டும் தான் தெரியும் ! அவர்தான், மெட்ராஸ் காலேஜில் சீட் வாங்கிக் கொடுத்து கிஷோரை படிக்க வைத்தார். ஆனால், ஏற்கனவே ஒருமுறை இவர்கள் நேரடியாக களத்தில் இறங்க, கொஞ்சம் எசகுப் பிசகாகிப் போனதால், "இந்த முறை குறி கரெக்டா இருக்கணும் ! " என்று சொல்லிக் கொண்டாள் காமினி .
***************************************************
அந்த வைரம் பரந்தாமனின் சேர்த்து வைத்திருந்த நகைகளில் மிக முக்கியமானது. போனமுறை கரும்புத் தோப்புக்கு அருகில் கிணறு வெட்டும் போது கிடைத்த புதையலில் இருந்த ஒரே வைர நகை அது ஒன்றுதான். கோவில் திருவிழாவிற்காக பரந்தாமன் பக்கத்து ஊருக்கு போயிட்டு வருவதற்குள் , தர்ம கர்த்தா பெரிய நாயகம் தனது வேலையை காட்டி விட்டார். இப்போது அது இருப்பதும் அவர் வீட்டில் தான்! ஆனால், அவ்வளவு ஈசியாக அவர் வீட்டிற்குள் போய்விட முடியாது. தனது பாதுகாப்புக்கென்று, போலீஸ் பாதுகாப்பை காசு கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார் பெரியநாயகம் . பெரிய நாயகம்தான் அவர்களுக்கு DSP , IG , எல்லாமுமே !
எப்படி உள்ளே போவது ?!
பெரியநாயகம் ஒடம்புக்கு முடியாத நிலையில், ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.
எல்லாம் இந்த வெத்தல பாக்கு போடறதால வந்தது.ஏற்கனவே கேன்சர் முத்திப் போயிருந்தது. டாக்டரும், கண்ணாடியை கழற்றிக் கையில் வைத்துக்கொண்டே சொல்லி விட்டார் - "எதையும் ஒரு 24 மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும் ! ".
"சரி அப்போ 24 மணி நேரம் கழிச்சு வரோம் எசமான்" என்று பெரிய நாயகத்தின் ஆட்கள் கழன்று கொண்டார்கள்.
மளிகை சாமானுக்கே காசில்லாத போது, இடைத் தேர்தல் வந்தால் எப்படி இருக்கும் ?! இந்த செய்தியும் அப்படிதான் இருந்தது சிவாவிற்கும் காமினிக்கும்.செய்தி கேட்டவுடன், காமினி தன் கையை அறுத்துக் கொண்டாள். எதற்கா ? அப்போதானே, பெரிய நாயகம் இருக்கும் ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆக முடியும் ?! காமினி எப்போதுமே இப்படித்தான்.
***************************************************
விசாலம் மருத்துவ மனை
அறை எண் 392 .
காலை 11 . 30 மணி.
இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னதால், பெரிய நாயகம், வண்டியை வர சொல்லியிருந்தார். யாரோ புது டிரைவர் என்று சொன்னார்கள்.
அதே விசாலம் மருத்துவ மனை ,
அதே அறை அல்ல , பக்கத்து அறை எண் 393 .
காலை 11 . 35 மணி.
காமினியின் கையை சுற்றியிருந்த குளுக்கோஸ் வயர்கள் இன்னும் கழற்றப் படவில்லை. இன்னும் ஒரு நாள் வரைக்கும் டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று டாகடர் சொல்லி விட்டார். டாக்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, காமினியின் கண்களும், காதுகளும் பக்கத்துக்கு அறையை உற்றுப் பார்த்துக் கொண்டும், ஒட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தன .
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றி விட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
நாம் எதிர் பார்த்தது போலவே ( எதிர்பார்த்தீர்கள் தானே ?!) அவள் குதித்த இடம் , பெரிய நாயத்தின் ஜீப் தான் ! அசந்து தூங்கிக் கொண்டிருந்த நாயகம் இதை கவனிக்க வில்லை ! ஆனால், டிரைவர் பார்த்து விட்டான் !ஆனால் ஒன்றும் சொல்லவில்லை . ஏனென்றால், அவன் பெயர் சிவா ! வண்டியை நேரே பெரிய நாயகத்தின் பங்களாவிற்கு விரட்டினான்.
***************************************************
என்னதான் பிளான் போட்டாலும், வில்லனின் வீட்டிற்குள் அவனுக்கே தெரியாமல் புகுந்த கதா நாயகி , ஒரு சமயம் அவனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் இல்லையா ?! காமினிக்கும் அதுதான் நடந்தது . ஹாலில் நடுநாயகமாக , படுத்திருந்த பெரிய நாயகம் சற்று சோர்ந்து போய்தான் காணப் பட்டார்.அவர் புது டிரைவரைப் பார்த்து கண்ணசைக்க, அவன் தலையசைத்தான். அசைத்து முடிக்கையில், அவன் கையிலிருந்து துப்பாக்கி வெளிப்பட்டது !
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
"சாரி எனக்கும் வேற வழி தெரியல" என்று சொன்ன காமினி , கண்ணிமைக்கும் நேரத்தில், பெரிய நாயகத்தை சுட்டு விட்டு, டிரைவர் சிவாவுடன் பங்களாவிலிருந்து வெளியேறினாள்.
காவலுக்கு இருந்த போலீஸ் காரர்கள் , "ஐயாவுக்கு திரும்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடிச்சு . டவுன் வரைக்கும் போய் , டாக்டர் ஐயாவைக் கூட்டினு வந்திடுறோம்" என்று அவர்கள் சொன்னதை நம்பித்தான் ஆக வேண்டும் !ஜீப்பை வேகமாக விரட்டிய படி,அவர்கள் வந்து நின்ற இடம், பரந்தாமனின் பங்களா.
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
எதிர்பார்த்த பாராட்டுதான் என்றாலும், காமினி, செயற்கை சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு சிவாவைப் பார்த்தாள். "ஐ ஆம் சாரி மிஸ்டர் பரந்தாமன். இந்த வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்கறதுக்காக நாங்க இத மீட்கல ! ஞாயப்படி,சட்டப் படி, (இந்த கதைப் படி !) இதை அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும் ! அதை செய்யத்தான் நாங்க இங்க வந்தோம். இந்த வைரத்தோட கெடைச்ச மத்த நகைகள் ஏங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும் !" என்று தங்களின் அடையாள அட்டையை சிவாவும் காமினியும் காண்பித்தனர். அந்த அடையாள அட்டைகளில் அச்சிடப் பட்ட "தமிழ் நாடு - காவல் துறை" என்ற எழுத்துக்கள் பரந்தாமனின் கண்களில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியதில் ஆச்சர்யம் இல்லை !
கிஷோரின் வேண்டுகோளுக்கிணங்க, பரந்தாமன் மேல் வழக்கு ஏதும் போடாமல், புதையலுடன் சென்னைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் சிவாவும், காமினியும் !
கிஷோர் சொன்ன போதே, புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கத் தேவையில்லை! பெரியநாயகமும் குண்டடி பட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்திருக்கத் தேவையில்லை !
**************முற்றும்**************
"அதெல்லாம் சரி, சிறுகதை எழுதிருக்கேன்னு சொன்னியே , அது எங்க ?" என்று கேட்பவர்களுக்கு, அவர்களின் இடுகைக்கு வந்து இதையே பின்னூட்டமாகப் போடப் படும் என்று ஒச்சரிக்கிரேன் ! ச்சீ .... எச்சரிக்கிறேன் !
புகைப்பட உதவி : http://paadumeen.blogspot.com, http://view.fdu.edu, http://agnosticnihilist.wordpress.com/